Aarivar Aaraaro – ஆர் இவர் ஆராரோ

Aarivar Aaraaro
ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?

1. பாருருவாகுமுன்னே – இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ? – ஆர்

2. மேசியா இவர்தானோ? – நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ? – ஆர்

3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய
மேவிய விண் ஒளியோ? – ஆர்

4. பட்டத்துத் துரைமகனோ? – நம்மை
பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
காட்டிடுந் தாயகனோ? – ஆர்

5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
மானவர் இவர்தானோ? – ஆர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *